Description
ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய “நடமாடுங் கல்லூரி” எனும் இந்நூலில் தமிழர்- திராவிட இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் நடமாடும் கல்லூரியாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுத்துகிறார்.
நடமாடுங் கோயில் – நடமாடுந் தெய்வம் என்றெல்லாம் பேசி, கேட்டு, பக்திப் பரவசத்தால் ஆடிப் பாடி வந்தவர்கட்கெல்லாம் நடமாடுங் கல்லூரி என்பது வேடிக்கையாகத்தான் இருக்கும். கடவுள், மதம்- ஜாதி பேதம், பழக்கவழக்கம் ஆகிய துறைகளிலே மாறுதல் – அடைந்து மறுமலர்ச்சி பெற்று, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மனவளத்துடனும், மனவலிமையுடனும் தன்னம்பிக்கை கொண்டவராக- தன்மானமிக்கவராக தமிழர்- திராவிடர் வாழ வேண்டும்.
இந்த நல்ல நிலைமைக்கு நாட்டு மக்களைப் பண்படுத்தி பக்குவப்படுத்தித் தருவது யார்? நல்லதொண்டு செய்து வருவது யார்?- எங்கள் நடமாடுங் கல்லூரி!
தமிழன் எண்ணத் துறையிலே பண்பட்டுவரும் அதே நேரத்தில், தன்னையும், தனது இனத்தையும், தன் நாட்டையும், தனது நாட்டின் இழிநிலையையும் அடிமை நிலையையும் உணர்ந்து அதற்கான எல்லாவித தியாகத்தையும் செய்தாக வேண்டும். நாம் யார்? நமது நாடு எது? என்பதை உணர வேண்டும். நடமாடுங் கல்லூரியின் முக்கிய பணிகளிலே நமது நாட்டை நாமே ஆண்டிடவேண்டும் – அதற்கான பணிபுரிந்தாக வேண்டும் என்பது மிகமிக முக்கியமாகும். பொது உரிமை – பொது உடைமை என்று, ஏற்கனவே குறிப்பிட்ட இரு நல்ல, மனிதப் பண்பு படைத்தவராக நாம் வாழ வேண்டுமானால், நம்மை நாம் உணர்ந்து, நமது, இனம், மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாத்திட வேண்டுமானால் நாமெல்லாம் நம்மிடையே நல்லறிவுப் பிரச்சாரம் செய்தாக வேண்டும். ஓய்வு நேரத்தையேனும் இயக்கப் பணியில்-பிரச்சாரத்தில், ஆக்க வேலைகளில் ஈடுபட்டு, நடமாடுங் கல்லூரிகளாய் நாட்டிலே நடமாட வேண்டுகிறேன்.

Reviews
There are no reviews yet.